15 November 2017

காற்று முன்னறிவிப்பு Wind Forecast 15-11-2017 21:00 Hrs.



வங்க கடலில் இலங்கைக்கு அருகில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுநிலையானது, தீவிர காற்றழுத்த தாழ்வுநிலையாக மாறி வடக்கு நோக்கி நகர்ந்து விட்டது. இதனால்  தமிழகத்தில் வடகிழக்கு காற்றின் வேகம் தடைபடுகிறது. மேலும் வரும் நாட்களில் காற்றின் வேகம் தடுமாறிக்கொண்டே இருக்கும்.

 
 22-11-2017 மதியம் முதல் கடற்கரை பகுதிகளில் காற்றின் வேகம் உயர்வதற்கான சூழல் நிலவுகிறது. இது இரண்டாம் காலநிலை காற்று தொடங்குவதற்கான ஒருசில அறிகுறிகள் போல தென்படுகிறது. அவ்வாறு தொடங்கினால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலுள்ள காற்றாலை மின் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது. இயல்பாக இரண்டாம் காலநிலை காற்றானது நவம்பர் இறுதி வாரத்திற்கும், டிசம்பர் முதல் வாரத்திற்கும் இடையில் தோன்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

காற்றுக்கான பழந்தமிழ் பெயர்கள்- Antique names for wind

       

தமிழில் ஆதிகால முதலே காற்றின் திசைகளை கண்டறிந்து அதற்கு   வெவ்வேறு பெயர்களில் அழைக்கும் வழக்கு இருந்து வந்துள்ளது.
        பொது வழக்கில் வளி, காற்று என்னும் இரண்டு சொற்களையும் ஒரே பொருளில் பயன்படுத்துவது உண்டு. எனினும் அறிவியலில் இவை வேறுவேறான பொருள் கொள்ளப்படுகின்றன.
தட்பவெப்பவியலில், காற்றுக்களை அவற்றின் வலு, எத்திசையில் இருந்து வீசுகிறது ஆகியவற்றின் அடிப்படையில் குறிப்பிடுவது வழக்கம். குறுகிய நேரம் நிலைக்கும் மிகவும் வேகமாக வீசும் காற்று வன்காற்று (gust) எனப்படும். ஏறத்தாழ ஒரு நிமிட நேரம் போன்ற இடைத்தரக் கால அளவுக்கு வீசும் பலமான காற்று பாய்புயல் (squall) எனப்படுகின்றது. நீண்ட நேரத்துக்கு வீசும் பலமான காற்று பல பெயர்களில் குறிப்பிடப்படுகின்றது. புயல், சூறாவளி போன்ற பெயர்கள் இவ்வாறான காற்றுக்களுக்கு வழங்கும் பெயர்கள் ஆகும்.
  • வாடை - வடக்கில் இருந்து வீசும் காற்று
  • சோழகம் - தெற்கில் இருந்து வீசும் காற்று
  • கொண்டல் - கிழக்கில் இருந்து வீசும் காற்று
  • கச்சான்  - மேற்கில் இருந்து வீசும் காற்று
இந்த அடிப்படையில் தென்மேற்கில் இருந்து வீசும் காற்று சோழகக் கச்சான் என்றும், தென்கிழக்கில் இருந்து வீசும் காற்று சோழகக் கொண்டல் என்றும் பெயர் பெறுகின்றன.